சென்னை: இதய அடைப்பை சரிசெய்யும் அதிநவீன காம்பிளக்ஸ் கரோனரி இன்டர்வென்சன் சிகிச்சை தொடர்பாக ஒருநாள் தேசிய கருத்தரங்கு சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துமவனையில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் ஜப்பானை சேர்ந்த பிரபல இதய அடைப்பு சிகிச்சை மருத்துவர் டோகிமோ டெரமாட்டோ, அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஹரிகிருஷ்ணன் கலந்துகொண்டு, அதிநவீன இதய சிகிச்சை முறைகள் தொடர்பாக டாக்டர்களுடன் கலந்துரையாடினார். இதயநாளங்களில் அடைப்பு ஏற்படும் போது சிடிஓ எனப்படும் கிரானிக் டோட்டல் அக்கல்சன் என்ற சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. சிறிய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு ஏற்படும்போது, இதய அடைப்பை சரி செய்வது மிகவும் கடினமான பணி ஆகிவிடுகிறது. இந்த பிரச்னையை சரி செய்ய காம்பிளக்ஸ் கரோனரி இன்டர்வென்சன் என்ற சிகிச்சை முறை உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டென்ட் பொருத்தி 100 சதவீதம் இதய அடைப்பு சரி செய்யப்படுகிறது. ஜப்பானில் பயன்படுத்தப்படும் அதிநவீன காம்பிளக்ஸ் கரோனரி இன்டர்வென்சன் தொடர்பாக இந்திய டாக்டர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார். காம்பிளக்ஸ் கரோனரி இன்டர்வென்சன் அறுவை சிகிச்சையை வீடியோவாக இந்திய டாக்டர்களுக்கு காட்டினார். இந்திய டாக்டர்கள் அதுதொடர்பாக தங்களிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். காம்பிளக்ஸ் கரோனரி இன்டர்வென்சன் சிகிச்சை தற்போது நாட்டிலேயே மிகச் சில மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அந்த மருத்துவமனைகளில் சென்னை அப்போலோ மருத்துவமனையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்தரங்கு மூலம் இதய அடைப்பு சிகிச்சை மேலும் மேம்படும் என்று கருத்தரங்கில் பங்கேற்ற டாக்டர்கள் தெரிவித்தனர்.