திருவள்ளூர், அக். 18: திருவள்ளூர் அடுத்த நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வெறிநாய்கள் சுற்றித்திரிவதால், நோயாளிகள் மிகவும் பீதியடைகின்றனர். திருவள்ளூர் அடுத்த நேமம் ஊராட்சியில் உள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, பிரசவத்திற்கான சிறப்புப் பிரிவு போன்றவை செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு மருத்துவமனைக்கு நேமம், ஆண்டர்சன்பேட்டை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், உட்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அதிகமாக வந்து சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் நாய்கள் அதிக அளவில் உலா வருகின்றன. இதனால் நோயாளிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் நாய்கள் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு ஓடுவதால் நோயாளிகள் அச்சமடையும் நிலை உள்ளது.மருத்துவமனை நுழைவு வாயிலில் கேட் வசதி இருந்தும் பாதுகாக்க பணியாளர்கள் இல்லாததால், திறந்த வெளியாக உள்ளது. இதனால் நாய்கள் தாராளமாக உள்ளே புகுந்து வெயிலுக்கு நோயாளிகளின் படுக்கையின் கீழ் ஓய்வெடுக்கின்றன.
நாய்களை அப்புறப்படுத்துமாறு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலமுறை புகார் செய்தும் மருத்துவ அலுவலர்கள் செய்வதறியாது உள்ளனர். எனவே, நாய்கள் மருத்துவமனைக்குள் ஜாலியாக உலா வருவதை தடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.