×

அக்கா கணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக ஓராண்டுக்குப்பின் குற்றவாளியை வெட்டி கொன்ற மைத்துனர்கள்

பல்லாவரம், அக். 18: அக்கா கணவரை கொன்ற கொலையாளியை ஒரு ஆண்டுக்கு பிறகு மைத்துனர்கள் ஓட ஓட வெட்டி கொன்ற சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், காலடிப்பேட்டை, நாகரத்தினம் தெருவை சேர்ந்தவர் பாபு (எ) போகபதி பாபு (46). இவரது மகள் சவுபாக்கியவதி (21). இவரை கடந்தாண்டு காலடிப்பேட்டை, காந்தி தெருவை சேர்ந்த மோகன் (27) என்பவர், காதல் திருமணம் செய்தார். இந்த திருமணத்தை மோகனின் அக்கா கணவரும், திமுக பிரமுகருமான கிரிராஜன் (42) நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சவுபாக்கியவதியின் தந்தை பாபு, கடந்தாண்டு  செப்டம்பர் 10ம் தேதி, நந்தம்பாக்கம் அஞ்சுகம் நகரில், கிரிராஜனை ஓட ஓட வெட்டி படுகொலை செய்தார். இந்த வழக்கில் பாபு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த பாபு, காலடிப்பேட்டையில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் குடியேறினார்.

இந்தவேளையில், கடந்த 17 நாட்களுக்கு முன், கிரிராஜனின் முதலாண்டு நினைவு தினம் வந்தது. அதில் சோகத்துடன் பங்கேற்ற அவரது மைத்துனர்கள் மோகன் (26) கிருஷ்ணன் (25) ஆகியோர், தனது அக்கா கணவர் கிரிராஜனின் மறைவுக்கு காரணமான பாபுவை பழிவாங்க வேண்டும் என சபதம் எடுத்தனர். அதற்காக, சமயம் பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், கிரிராஜன் படுகொலை செய்யப்பட்ட நந்தம்பாக்கம், அஞ்சுகம் நகருக்கு அடுத்த தெருவான நாலியப்பன் சாலை, பாரதியார் நகர் மெயின்ரோட்டுக்கு பாபு நேற்று, தனியாக பைக்கில் சென்றார். இதையறிந்த மோகன், கிருஷ்ணன் ஆகியோர், அங்கு சென்று, தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து, பாபுவை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், சுதாரித்து கொண்ட பாபு, அங்கிருந்து தப்பியோடினார். ஆனாலும் அவர்கள், ஓட ஓட விரட்டி, அவரது தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் பாபு அணிந்திருந்த ஹெல்மெட் சுக்கு நூறாக சிதறி, தலை சிதைந்து  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்து கடை வீதியில் இருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து சாவகாசமாக தப்பி சென்றனர்.
தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மோகன், கிருஷ்ணன் தலைமையிலான கும்பலை தேடி வருகின்றனர். இதற்கிடையில், கொலை நடந்த இடத்தை அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்ட பாபு மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வேறு யாருக்காவது இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளிகளின் அடையாளத்தை காண, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.

Tags : Brother-in-law ,murder ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...