அஞ்சுகிராமம், அக். 18: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள கட்டிடத்தின் வாசல் பகுதியில் மர்ம பை ஒன்று கடந்த சில நாட்களாக இருந்தது. இதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்ப்பதும், செல்வதுமாக இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மர்ம பை குறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் சென்று மர்மபை இருந்த இடத்தை சோதனையிட்டனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பையில் அருகிலுள்ள துணிக்கடையில் உள்ள கழிவு துணிகளை வைத்து குப்பை வண்டியில் போடுவதற்காக வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் கடந்த சில தினங்களாக நிலவிவந்த பரபரப்பு அடங்கியது. போலீசாரும் நிம்மதி அடைந்தனர்.