உளுந்தூர்பேட்டை, அக். 18:
உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வயல்வெளிகள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான காப்புகாடுகள் உள்ளது. இந்த காப்புகாடுகள் மற்றும் வயல்வெளிப்பகுதியில் கடந்த சில ஆண்டுகாலமாக அதிக அளவில் மயில்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து மாலை வரையில் நகரப்பகுதிக்கு அருகில் உள்ள வயல்வெளிப்பகுதியில் இருந்து வந்த ஒரு பெண் மயில் முக்கிய தெருக்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மீது அமர்ந்து இறை தேடி வந்தது. இதனை பார்த்த ஏராளமான பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த மயிலை ஆச்சரியத்துடன் பார்த்தனர். நகரப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட முக்கிய தெருக்களில் இந்த மயில் பறந்து சுற்றி வந்ததால் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் பார்த்து ரசித்தனர். கடந்த சில மாதங்களாக இது போன்று நகரப்பகுதிக்கு வரும் மயில்களை நாய்கள் கடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்து வருவதால் அழிந்து வரும் மயில் இனத்தை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.