சாலை விபத்தில் வாலிபர் பரிதாப பலி

வானூர், அக். 18:  வானூர் தாலுகா கிளியனூர் காவல்நிலைய சரகத்துக்குட்பட்ட எறையானூர் பகுதியில் சாலையோர தடுப்புக்கட்டையில் பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். காவலர் ஒருவர் படுகாயம் அடைந்து ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகர காவலராக பணியாற்றி வருபவர் சதீஷ் (26). இவரது மாமா திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (28). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை சுமார்

6 மணியளவில் புதுச்சேரிக்கு சென்று மீண்டும் திண்டிவனம் நோக்கி புல்லட்டில் சென்று கொண்டிருந்தனர். சதீஷ் புல்லட்டை ஓட்டிச் சென்றார். பின்புறம் குமரவேல் அமர்ந்து சென்றார். எறையானூர் மேம்பாலம் பகுதியில் சென்ற போது நெடுஞ்சாலையோரத்தில் இருந்த தடுப்புக்கட்டையில் புல்லட் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். குமரவேல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை 5 மணியளவில் இறந்தார். காவலர் சதீஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: