திட்டக்குடி, அக். 18: திட்டக்குடியை அடுத்துள்ள பெருமுளை கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு சிறுமுளை, செவ்வேரி, கீரனூர், வதிஷ்டபுரம் பகுதிகளை சேர்ந்த வீட்டு மனை இல்லாத 250க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் பல முறைகள் முறையிட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவிடு செய்து தரவில்லை. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பட்டாதாரர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாக்களையும், புகார் மனுவையும் ஒரு பாடையில் வைத்து ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்றனர். அங்கு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து மங்களூர் (கிழக்கு) ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் தாசில்தார் செந்தில்வேலனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் செந்தில்வேல், மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார். பாடையுடன் வந்து மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.