களக்காடு, அக். 18: தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று காங். மூத்த தலைவர் தங்கபாலு குற்றம்சாட்டினார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி, கட்டளை, தளவாய்புரம், கோதைசேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தமிழக காங். முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு திறந்த ஜீப்பில் சென்று தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜ அரசாலும், தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அதிமுகவாலும் தமிழகத்திற்கு எந்த நன்மைகளும் ஏற்படவில்லை. தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் வெகுண்டெழுந்து மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த வெற்றி தமிழகத்தில் புதிய அரசு அமைய அச்சாரமாகவும், மத்தியில் பாஜ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் அமையும் என்றார். தங்கபாலுவுடன் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.