×

பிராஞ்சேரி குளக்கரையில் தடுப்புகள் அமைக்கப்படுமா?

வீரவநல்லூர், அக். 18:  பிராஞ்சேரி குளக்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தை அடுத்த பிராஞ்சேரியில் சாலையை ஒட்டி 336 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய குளம் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் முக்கிய வழித்தடங்களுள் ஒன்றாக திகழும் பாளை. - அம்பை நெடுஞ்சாலையில் சாலையின் பக்கவாட்டில் சுமார் 1 கிமீ தூரத்திற்கு இந்த குளமானது பரந்து விரிந்து காணப்படுகிறது. இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துசெல்கின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் பெருமளவில் இந்த குளக்கரை வழியாக கடந்து செல்கிறது. தற்போது மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட காரணத்தாலும், கன்னடியன் கால்வாயில் கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் இக்குளமானது தற்போது நிரம்பி காணப்படுகிறது. ஆபத்தான இந்த குளக்கரையில் அநேக இடங்களில் சாலையும் குளமும் 2 அடி குறுகிய தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் இச்சாலையானது குளக்கரையில் அமைந்துள்ளதால் மேடுபள்ளங்களுடன் திகழ்கிறது. குளக்கரையில் குறுகிய சாலையாக உள்ளதால் வண்டிகள் கிராசிங் ஆகும்போது நிலை தடுமாறி குளத்தில் கவிழும் நிலையும் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குளக்கரை முழுவதும் தடுப்பு வேலி அமைத்து விபத்தை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இதுகுறித்து அவ்வழியாக தினமும் பயணிக்கும் தனியார் ஸ்கேன் சென்டர் ஊழியர் இசக்கிபாண்டியன் கூறுகையில், சேரன்மகாதேவியில் இருந்து - வண்ணார்பேட்டைக்கு தினமும் இச்சாலை வழியாக பயணம் செய்கிறேன். பிராஞ்சேரி குளக்கரையில் தடுப்புவேலி இல்லாததால் வண்டி கிராசிங் ஆகும்போது பயத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இரவில் பணி முடிந்து திரும்பும்போது இவ்வழியாக புதிதாக பயணிப்பவர்கள் நிலை தடுமாறி குளத்தின் பக்கவாட்டில் விழுகின்றனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி விரைவில் இப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், என்றார்.

Tags :
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது