ஸ்பிக்நகர், அக். 18: தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் பகுதியில் பாரதிநகரில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள்அவதிப்படுகின்றனர். வாறுகால் வசதி முறையாக செய்துதரப்படாததால் இத்தகைய அவலம் தொடர்வதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்டபாரதிநகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கற்களை கொண்டு சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது மழை காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் வாட்டம் கொடுத்து அமைக்கப்படவில்லை. இதற்கு மாறாக சாலையில் இருபக்கங்களிலும் மேடாகவும் நடுவில் பள்ளமாகவும் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது பெய்துவரும் மழையால் பெருக்கெடுக்கும் தண்ணீர் செல்ல வழியின்றி நாள்கணக்கில் சாலையிலேயே குளம்போல் தேங்கிநிற்கும் அவலம் தொடர்வதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே தற்போது மாநகராட்சியின் சார்பில் பல்வேறுபகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பாரதிநகர் பகுதியில் தேங்கிநிற்கும் மழைநீரைஅகற்ற நடவடிக்கை இல்லை. இதனால் நல்ல தண்ணீரில் வாழும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவற்கு இந்தபகுதியில் தேங்கியுள்ள மழைதண்ணீர் காரணமாகஉள்ளதோடு சுகாதார சீர்கேட்டை உருவாக்கியுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, தற்காலிகமாக மின்மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றவும், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண சாலையில் நடுப்பகுதியில் உள்ள கற்களை அகற்றி தாழ்வான பகுதியை உயர்த்தி மீண்டும் கற்களை பதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாறுகால் வசதியில்லாமல் உள்ள இந்தபகுதியில் விரைந்த் வாறுகால் அமைத்து கொடுக்க வேண்டும். இவற்றை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உருக்குலைந்த சாலைகளின் பள்ளத்தில் மழையால் பெருக்கெடுத்த நீர் நாள்கணக்கில் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.