திருப்பூர், அக்.18:திருப்பூரில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களில் வடமாநில தொழிலாளர்களே அதிகளவில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக ஒரு சில வடமாநிலத்தவர் வழிப்பறி, கொலை, கொள்ளை போன் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஒரு சில கிராமங்களில் வடமாநில தொழிலாளர்களுக்கு வீடு கொடுக்க பொதுமக்கள் மறுத்து வருகின்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள், பஞ்சாலைகள், சாய ஆலைகள், விசைத்தறி கூடங்கள், கைத்தறி கூடங்கள் இயங்குகின்றன. தவிர, கட்டுமானப்பணி, ஓட்டல், துப்புரவு பணி, கோழிப்பண்ணை, செங்கல் சூளை, கரும்புவெட்டும் தொழில் உள்பட பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் பணிபுரிகின்றனர்.
இவர்களில், கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வடமாநில தொழிலாளர்கள். இவர்களது எண்ணிக்கை கடந்த 5 ஆண்டில் இருமடங்காக அதிகரித்து விட்டது. 15 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் திருப்பூர் புறநகர் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.திருப்பூரில் இயங்கும் எந்த ஆலையாக இருந்தாலும் சரி, அதில் வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு சேரும்போது, அவர்களது போட்டோ மற்றும் முகவரி உள்ளிட்ட முழு தகவல் காவல்நிலையத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு. ஆனால், பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் இந்த உத்தரவை பின்பற்றுவது இல்லை. போலீசாரும் முறையான கண்காணிப்பு பணியை மேற்கொள்வது இல்லை. சில நிறுவனங்களில் தொழிலாளரின் முழு விவரம் தெரியாமல் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர். ஒரு சில தொழிலாளர்கள் வெளியிடங்களில் குழுவாக தங்கி வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் வேலை நேரம் போக, மீதி நேரங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, கொலை, போதை பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட துவங்கிவிட்டனர்.
வழிப்பறி, திருட்டு மட்டுமின்றி, பாலியல் குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள் விற்க தடை இருந்தாலும், திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு இவை தங்கு தடையின்றி கிடைக்கிறது. கடந்த வாரம் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய வடமாநில தொழிலாளர்கள் இதுவரை போலீஸ் பிடியில் சிக்கவில்லை.ரயில் பயணிகளிடம் கொள்ளை, ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை என இக்குற்றச்செயல்களிலும் வடமாநில தொழிலாளர்கள்தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மேற்கண்ட குற்றச்செயல்கள் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு காவல்நிலையத்தில் மாதம் 15-20 வழக்கு பதிவானது. ஆனால், தற்போது அதே காவல்நிலையத்தில் 25-35 வழக்குகள் பதிவாகிறது. போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குற்றவாளிகளில் 90 சதவீதம் பேர் வடமாநில தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. வடமாநில தொழிலாளர்களின் குற்றச்செயல் அதிகரித்து வருவதால் ‘டாலர் சிட்டி’ என பெயரெடுத்த திருப்பூர் மாநகர மக்கள் கடும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். கிராம புறங்களி–்ல் வடமாநில தொழிலாளர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடக்கூடாதென கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.