கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை சேமித்து வைத்தால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், அக். 17: கொசு உற்பத்தியாகும் வகையில், தண்ணீரை சேமித்து வைத்தால் குடிநீர் துண்டிப்பு செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாநகராட்சி மூலம் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தற்போது மாநகராட்சி பகுதியில் அனைத்து வார்டு பகுதிகளிலும் 300 வீடுகளுக்கு ஒரு கொசு தடுப்பு பணியாளர் வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டு வீடுவீடாக சென்று கொசு உற்பத்தியை கண்டறிந்து அவற்றை அழித்து, தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்தி, தேக்கி வைக்கப்பட்டுள்ள நல்ல தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றியும், அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு கொசு உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வார்டு பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் காய்ச்சல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு உடனே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் சேமித்து வைத்து அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுவதற்கு காரணமாக உள்ள வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் வீட்டின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றனர்.

Related Stories: