உடுமலை, அக். 17: உடுமலை நகரில் டாஸ்மாக் கடை பாருக்கு, மீண்டும் அதிகாரிகள் சீல் வைத்தனர். உடுமலை நகரில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த, 6 டாஸ்மாக் பார்களுக்கு சில தினங்களுக்கு முன், டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர். பசுபதி வீதியில் உள்ள பாருக்கும் சீல் வைத்தனர். ஆனால் அந்த பாரின் மற்றொரு கதவை திறந்து மது விற்பனையை ஊழியர்கள் மும்முரமாக நடத்தி வந்தனர்.
இதனால், குடிமகன்கள் தாராளமாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் டாஸ்மாக் அதிகாரிகள், பாரின் ஒரு கதவுக்கு மட்டும் சீல் வைத்துவிட்டு, மற்ற இரு கதவுகளுக்கு சீல் வைக்காமல் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து, நேற்று அந்த பாருக்கு சென்ற டாஸ்மாக் அதிகாரிகள், மற்ற இரு கதவுகளுக்கும் சீல் வைத்தனர்.