×

மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி காயம்

மேட்டுப்பாளையம், அக்.17: மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தாக்கியதில் கூலி தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட குமாரபாளையம் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம்(56). இவர் நேற்று வனப்பகுதியை ஒட்டி இருந்த தனியார் தைல மர தோப்புக்குள் தனது ஆடுகளை மேய்ச்சலில் விட்டு அப்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை சுந்தரத்தை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரம் செல்போன் மூலமாக தனது உறவினர்களுக்கு யானை தாக்கியது குறித்து  தகவல் அளித்துள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுந்தரத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  பகல் நேரத்திலேயே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தவரை காட்டு யானை தாக்கியது செம்மரம் பாளையம் கிராமத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : elephant worker ,Mettupalayam ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது