×

சத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி, மாடு பலி

சத்தியமங்கலம், அக்.17:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுவடவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துராஜ் (54). இவர், தனது விவசாய தோட்டத்தில் 3 பசு மாடு வைத்து பராமரித்து வந்தார். நேற்று காலை மாடுகளை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மதியம் முத்துராஜ் மாடுகளை பார்ப்பதற்காக சென்றபோது ஒரு பசுமாடு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அருகே சென்ற முத்துராஜ் மீது அறுந்து கிடந்த மின்கம்பி பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.

கணவர் முத்துராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி ராஜாத்தி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அவர் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து மின்வாரிய ஊழியகள் சம்பவ இடத்திற்கு சென்று அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றினர். சத்தியமங்கலம் போலீசார் முத்துராஜ் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த 6 மாதமாக மின்கம்பி அறுந்து தொங்கியதாகவும், இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தும் மின்கம்பியை அகற்றாமல் இருந்ததால் விபத்து நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Tags : Sathi ,
× RELATED திருச்செந்தூரில் ஆவணி திருவிழா; சுப்பிரமணிய சுவாமி பச்சை சாத்தி வீதியுலா