ராசிபுரம், அக். 17: ராசிபுரத்தில் செல்லப்பிராணிகள் விற்கப்படும் கடைகளில், ஆமை, கடல் பாறை மற்றும் தடைசெய்யப்பட்ட உயிரினங்கள் விற்கப்படுகிறதா என நேற்று காலை வனத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ராசிபுரத்தில் உள்ள செல்லப்பிராணிகள் விற்கும் கடைகளில், சட்டவிரோதமாக நரி, ஆமை, கடல் பாறை மற்றும் தடைசெய்யப்பட்ட உயிரினங்களை விற்பனைக்காக வளர்ப்பதாக மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில்,ராசிபுரம் வனஅலுவலர் பெருமாள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, ராசிபுரம் பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனையகத்தில் ஒரே சமயத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ஆனால் இந்த ஆய்வில் ஆமை, நரி, கடல்பாறை மற்றும் தடைசெய்யப்பட்ட உயிரினங்கள் ஏதும் கடைகளில் விற்கப்படவில்லை என தெரியவந்தது. காலை நேரத்தில் வனத்துறை அலுவலர்கள், செல்லப்பிராணிகள் விற்பனை கடைகளில் மேற்கொண்ட திடீர் ஆய்வால் ராசிபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்: நாமக்கல் உதவி வன பாதுகாவலர் தலைமையிலான 12 பேர் கொண்ட வன அலுவலர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட நகர்புறம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள 6 செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்டுள்ள விலங்குகள் ஏதாவது விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து இந்த சோதனை நடைபெற்றது. வனத்துறை அலுவலர்கள், கடை உரிமையாளரிடம் விலங்குகளை விற்பனை செய்வது குற்றம் என்றும், விதிகளை மீறி விற்பனை செய்தால் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தனர்.