×

திருச்செங்கோடு அருகே விவசாயி வீட்டில் 34 பவுன் நகை திருட்டு

திருச்செங்கோடு, அக் 17:  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஏரிக்காட்டை சேர்ந்தவர் பரமசிவம் (60). விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி(55). இவரது மகன் பிரதீப் (27), திருச்செங்கோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்  சில நாட்களுக்கு முன்பு  இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் பிரதீப்பை கவனித்துக்கொள்ள அவரது தாயார் விஜயலட்சுமி மற்றும் பிரதீப்பின் மனைவி மோகனபிரியாவும் மருத்துவமனையில் தங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று  முன்தினம் இரவு பரமசிவம், அவரது தாயார் பாக்கியம், மாமியார் நல்லம்மாள் ஆகியோர் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். பரமசிவம் வெளியில் படுத்துக்கொள்ள மற்ற இருவரும் வீட்டினுள் தூங்கினர். வீடடின் பிரதான வெளிக்கதவு  மற்றும் கதவுகள் திறந்தே இருந்தன. நள்ளிரவு வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 34 பவுன் நகைகளை திருடிச்சென்று  விட்டனர். நேற்று  காலை எழுந்தவர்கள், பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை சேகரித்துச்சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மல்லசமுத்திரம் அருகேயுள்ள கருமனூரில் 3 வீடுகளில் இதேபோல் திருட்டு நடந்ததும் 15 பவுன் நகையும் ரொக்கம் ₹1.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : house ,Tiruchengode ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...