ஓசூர்,அக்.17: ஓசூர் நகராட்சியில் 2வது நாளாக நேற்று பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பயன்பாட்டுக்கு வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 143 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஓசூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, மணி, சீனிவாசன், வெங்கடேஷ், ரமேஷ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இணைந்து உழவர் சந்தை, வட்டாட்சியர் அலுவலக சாலை, பாகலூர் ரோடு, மலர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், கடந்த 2 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 143 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டுக்கு வைத்திருந்த கடையின் உரிமையாளர்களிடம் ₹50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து இனிவரும் நாட்களிலும் மாநகராட்சி பகுதியில் சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.