ஊத்தங்கரை, அக்.17: கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 200 தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக பலதரப்பட்ட போராட்டங்களும், பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து, தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்து நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் தலைவர், ஆலை மேலாண்மை இயக்குனர் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 3 மாதத்தில் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை. இதனால், நேற்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் வரும் 21ம் தேதி முதல் ஆலை நுழைவாயிலில் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என்றனர்.