கடையம், அக். 17: ஆழ்வார்குறிச்சி அருகே 33 ஆட்டுக் குட்டிகள் மர்மமாக இறந்த நிலையில், அப்பகுதியில் நேற்று கால்நடை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் வஉசி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன் (60). விவசாயியான இவர், 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை அச்சன்குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். நேற்று முன்தினம் 33 ஆட்டுக்குட்டிகளை சுடலை மாடசுவாமி கோயில் அருகே பட்டியில் அடைத்து விட்டு மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
மாலையில் வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 33 ஆட்டுக்குட்டிகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்து ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ காஜாமுகைதீன், தனிப்பிரிவு ஏட்டு முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். நேற்று நெல்லை கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ரோஜர், நோய் புலனாய்வு பிரிவு டாக்டர் ஜான்சுபாஷ், அம்பை கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ஆபிரகாம், நோய் புலனாய்வு பிரிவு கால்நடை உதவி மருத்துவர் பொன்மணி, ஆழ்வார்குறிச்சி கால்நடை உதவி மருத்துவர் ராதாகிருஷ்ணன், கால்நடை உதவியாளர்கள் மற்றும் ஆழ்வார்குறிச்சி பகுதி 2 விஏஓ டேனியல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ஆட்டுக்குட்டிகளை பார்வையிட்டனர்.