×

விரைவு பஸ்சில் ஒட்டியிருந்த ஆஞ்சநேயர் ஸ்டிக்கர் அகற்றம்

நெல்லை, அக். 17: செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு விரைவு பஸ்சில் ஒட்டியிருந்த ஆஞ்சநேயர் ஸ்டிக்கர் நிர்வாக அதிகாரி உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நீண்ட தூரங்களுக்கு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விரைவு பஸ்கள் இயக்கப்படும் ஊர்களின் சிறப்பை கருதி  ஓட்டுனர், நடத்துனர் இணைந்து சொந்த செலவில் பஸ்சை அலங்கரிப்பது வழக்கம். விரைவு போக்குவரத்து கழக சென்னை பணிமனையிலிருந்து நாமக்கல் பகுதிக்கு ஏசி விரைவு பஸ் இயக்கப்பட்டுவந்தது. நாமக்கல் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளதால் அந்த பஸ்சில் ஆஞ்சநேயர் ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை விரைவு போக்குவரத்து கழகத்துக்கு புதிய ஏசி பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து ஆஞ்சநேயர் ஸ்டிக்கர் ஒட்டிய பஸ் நெல்லை மாவட்டம் செங்கோட்டை பணிமனைக்கு வழங்கப்பட்டது. செங்கோட்டையிலிருந்து சென்னை சென்ற அந்த பஸ்சில் ஆஞ்சநேயர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவியது. இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் உத்தரவின் பேரில் அந்த பஸ்சில் ஒட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் ஸ்டிக்கர் அகற்றப்பட்டதாக விரைவு போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...