மார்த்தாண்டம்: குழித்துறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் குழித்துறை ஹோம் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் சிறப்பு கூடுகை நடந்தது. நிகழ்ச்சிக்கு குழித்துறை வட்ட சட்டப்பணி குழு தலைவரும், குழித்துறை சப்-ஜட்ஜூமான முத்து மகாராஜன் தலைமை வகித்தார். குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெய்சங்கர், முருகேசன், 2வது கூடுதல் உரிமையியல் நீதிபதி செல்வம், மாவட்ட முதன்மை கூடுதல் நீதிபதி ஜெய்காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் தேவதாசன் வரவேற்றார். சிறப்பு பள்ளி மாணவ, மாணவியரின் நடனம் உட்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில் சப்-ஜட்ஜ் முத்து மகாராஜன் பேசுகையில், கடவுளின் அன்பு அதிகமாக கிடைக்க பெற்றவர்கள் சிறப்பு குழந்தைகள். இந்த பிள்ளைகள் குறைபாடு உள்ளவர்கள் அல்ல. மாற்றுத்திறன் படைத்தவர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சாதிக்க பிறந்த சாதனையாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு நீதிபதிகள் பழங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புகளையும் பார்வையிட்டனர். பள்ளி தலைமையாசிரியர் டென்னிஸ் நன்றி கூறினார்.