×

பள்ளி மாணவர்களுக்கான 2ம் பருவ பாடப்புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்

காரைக்கால், அக்.17:பள்ளி மாணவர்களுக்கான 2ம் பருவ பாடப்புத்தகங்களை உடனே வழங்க வேண்டும் என காரைக்கால் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்க தலைவர் வின்சென்ட் கூறியதாவது:காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, கடந்த சில ஆண்டுகளாக இலவச பாடப் புத்தகங்களை கல்வித்துறை காலத்தோடு வழங்குவதில்லை. இந்த குற்றச்சாட்டை மாவட்ட பெற்றோர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.வழக்கம் போல், நடப்பு ஆண்டும் பள்ளி துவக்கத்திலிருந்து பாடப்புத்தகங்களை வழங்காததால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் காலாண்டு தேர்வை எழுதியுள்ளனர். அதேபோன்று அக்டோபர் 8ம் தேதிக்குள் 2ம் பருவத்திற்கான பாடபுத்தகம் வழங்கப்பட்டுவிடும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்து இருந்தது. அதனால் இதுநாள் வரை மாணவர்களுக்கு 2ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

இப்படியே போனால், மாணவர்களின் கல்வித்தரம் முழுமையாக பாதிக்கும் அவலம் உள்ளது. எனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உடனடியாக பள்ளி மாணவர்களுக்கான 2ம் பருவ பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, மாவட்ட நிர்வாகமும், கல்விதுறை அமைச்சரும் நவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும் காரைக்கால் திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் பழுதானதால், புதிய பள்ளி கட்டிடம் கட்ட, கடந்த 2012ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கியது. 2014ல் முடிக்க வேண்டிய இந்த பள்ளி கட்டிட பணி, 7 ஆண்டு ஆகியும் முழுமை பெறவில்லை. சுமார் 800 மாணவிகள் பழைய கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் இன்றி கல்வி பயிலும் அவலநிலை உள்ளதால், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு பள்ளி கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Tags : school children ,
× RELATED பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 12 பள்ளி...