விழுப்புரம், அக். 17: விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தினை ஆட்சியர் சுப்ரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையம் விழுப்புரம் அய்யூர்அகரம் இ.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சியர் சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உட்காருவதற்கான இடத்தினையும், வாக்கு எண்ணுவதற்கு தேவையான மேஜைகள் போடுவதற்கான இடத்தினையும் வாக்குப்பதிவு முடிந்தபிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமினையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது குறித்து எஸ்பி ஜெயக்குமாருடன் ஆலோசனை நடத்தினார். பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் நாளன்று ஸ்ட்ராங் ரூம் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து மேஜைகள், கட்டிடத்தின் வெளிப்புற பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது எஸ்பி ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.