உடுமலை, அக். 16: உடுமலை ராஜேந்திரா சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட உள்ளது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்காக ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மொத்தம் 200 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதிகம்பேர் விண்ணப்பித்துள்ளதால் குலுக்கல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று 1ம் வகுப்புக்கு குலுக்கல் நடந்தது. விண்ணப்பதாரர்கள் 267 பேர் வந்திருந்தனர். பெற்றோர் முன்னிலையில் சீட்டுகளை குழந்தைகள் எடுத்தனர். 40 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தொடர்ந்து 4 நாட்களுக்கு குலுக்கல் நடக்க உள்ளது. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பள்ளி துவங்கும் நாள் அறிவிக்கப்படும் என பள்ளி முதல்வர் தெரிவித்தார்.