×

மாநில தடகள போட்டியில் போலீசார் புதிய சாதனை அதிகாரிகளும் பதக்கம் வென்றனர்

மதுரை, அக். 16: தமிழக காவல்துறைக்கான மாநில அளவிலான தடகள போட்டியில் பலர் புதிய சாதனைகளை படைத்தனர்.மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழக காவல்துறைக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் நேற்றுமுன்தினம் துவங்கின. இன்று நிறைவு பெறும் இந்தப் போட்டிகளில் தமிழக காவல்துறையை சேர்ந்த ஆயுதப்படை, தமிழ்நாடு அதிரடிப்படை, சென்னை பெருநகரம், வடக்கு, மத்தி, மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் ஆகிய 7 அணிகளை சேர்ந்த 476 பேர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இரண்டாம் நாளான நேற்று தென்மண்டல காவல்துறையை சேர்ந்த ஏட்டு கிருஷ்ணரேகா, உயரம் தாண்டுதலில் 1.5 மீட்டர் உயரம் தாண்டி முந்தைய சாதனையை முறியடித்தார்.சென்னை காவல்துறையை சேர்ந்த உமாமகேஸ்வரி, நீளம் தாண்டுதலில் கடந்த 2005ல் நிகழ்த்திய 5.58 மீ தூரத்தை முறியடித்து, 5.70 மீ தூரம் தாண்டி புதிய சாதனை படைத்தார். ஆயுதப்படையை சேர்ந்த போலீஸ்காரர் பிரபாகரன், 20 கிமீ தூர நடை போட்டியில், ஒரு மணிநேரம் 52 நிமிடம் 49 வினாடிகளில் கடந்து 2012ல் நிகழ்த்தியிருந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

ஆயுதப்படையை சேர்ந்த லோகநாதன், 1500 மீ தூர ஓட்டப்பந்தயத்தில் 3 நிமிடம் 56.66 வினாடிகளில் கடந்து பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். இந்தப்பிரிவில் 40 வயதை கடந்தவர்களுக்கான போட்டியில், உளுந்தூர்பேட்ைட 10வது அணி சிறப்பு காவல்படையை சேர்ந்த துணைத்தளவாய் முருகேசன் 5 கிமீ தூர நடைப்போட்டியில் முதலிடம் பெற்றார். திருச்சி துணை கமிஷனர் மயில்வாகனன் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து பதக்கம் வென்ற அதிகாரிகளின் பட்டியலில் இடம் பிடித்தனர்.


Tags : state athletics competition ,
× RELATED மாநில தடகள போட்டி: அரசு பாலிடெக்னிக் மாணவி சாதனை