கோவை, அக். 16: நடப்பாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 11,12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை இலக்காக கொண்டு அனைத்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வேண்டுகொள் விடுத்துள்ளார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பேசியதாவது : கோவை மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு தவறாது வரவேண்டும். பள்ளிகளின் மாணவர்களுக்கு சத்துணவு தரமாக வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.