கோவை அக், 16 : கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள உழவர் சந்தை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சுமார் 1.3 ஏக்கர் அளவில் 100 க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு உள்ளன. கோவை மாநகரில் உள்ள சூலார், இருகூர், நீலாம்பூர் போன்ற பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்த காய்கறிகளை நேரடியாக பொதுமக்களிடையே விற்பனை செய்கின்றனர். மற்ற சந்தைகளை காட்டிலும் இங்கு விலை சற்று மலிவாக இருப்பதால் இங்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள். தற்பொழுது, மழை பெய்து வருவதால் விவசாயிகளும், வாடிக்கையாளர்களும் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். உழவர் சந்தைக்குள் இன்று வரை தார் தரை மற்றும் கான்கிரீட் தரை அமைக்கப்படவில்லை. ஆகையால் மழை நீரால் சந்தை முழுக்க சேறும் சகதியுமாக உள்ளது. சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சகதிக்குள் நடந்துசென்று காய்கறிகளை வாங்க முடிவதில்லை.