×

பனையை வெட்டினால் பிணை கிடையாது

ஈரோடு, அக்.16: பனையை வெட்டினால் பிணையில் வர முடியாத வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என கள் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் மண்ணின் மரம் பனை. தமிழ்நாட்டின் அடையாளமாக இருந்த பனை மரங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. நாடு சுதந்திரம் பெற்றபோது தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது, 4.50 கோடியாக குறைந்துவிட்டது.

பனை பொருட்களுக்கு உலகளவில் சந்தை கிடைப்பதால் பெரும் அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரக்கூடிய ஒன்றாக அது விளங்குகிறது.
பனை மரங்கள் அழிக்கப்பட்டதால் மரம் ஏறும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பனை மரங்களை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் பனை மரங்களை வெட்டினால் பிணையில் வர முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதேபோல், தமிழகத்திலும் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். மேலும், தமிழகத்தில் கள்ளுக்கான தடையை அரசு உடனடியாக நீக்கி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு