தஞ்சை, அக். 16: தஞ்சை அருகே பள்ளியக்ரகாரம்- கும்பகோணம் பிரிவு சாலையின் ஒரு பகுதியில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் மூடப்படாததால் கடந்த 2 மாதங்களாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை அருகே பள்ளி அக்ரகாரத்திலிருந்து மேற்குபுறம் அரியலூர் மார்க்கமும், கிழக்குபுறம் கும்பகோணம் மார்க்கமும் பிரிகிறது. கும்பகோணம் பிரிவு சாலையின் ஒரு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்கான ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிக்காக சாலையின் பாதி பகுதி தோண்டப்பட்டது. பின்னர் குழாய் பதிக்கும் பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது குழாய்கள் பதிக்கப்பட்டு அதன்மேல் தோண்டப்பட்ட மண்ணை கொண்டு மூடப்பட்டுள்ளது. அதன்மேல் முன்பு இருந்தவாறு தார்சசாலை போடவில்லை. இதனால் வாகனங்கள் இச்சாலையில் செல்ல முடியவில்லை.குழாய் பதிக்க குழி தோண்டியபோது எவ்வாறு இச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததோ தற்போது பள்ளத்தை மூடிய பிறகும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் பள்ளத்தில் உள்ள மண்மேடு கீழிறங்கி மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் சாலையின் ஒரு ஓரத்தில் செல்ல வேண்டியுள்ளது. அந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் செல்ல வழியின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.