பெரம்பலூர், அக்.16: பெரம்பலூரில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியின் ஒரு பிரிவில் லெப்பைக்குடிகாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சான்றிதழ், பரிசு வழங்கினார்.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கணிதம், சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் 140 பள்ளிகளை சேர்ந்த 167 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் ஒரு மாணவர் இடம் பெற்ற ஒரு கண்காட்சியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், தனலட்சுமி சீனிவாசன் (தமிழ்வழி) மேல்நிலைப்பள்ளி 2ம் இடத்தையும், அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி 3ம் இடத்தையும் பெற்றன. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் ஒரு மாணவர் இடம்பெற்ற ஒரு கண்காட்சியில் லெப்பைக்குடிகாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பாடாலூர் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2ம் இடத்தையும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை 3ம் இடத்தையும் பெற்றன.
இரு மாணவர் பங்கேற்ற கண்காட்சியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் (ஆங்கிலவழி) மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், சிறுவாச்சூர் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி 2ம் இடத்தையும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி 3ம் இடத்தையும் பெற்றன.
கணிதம் சம்மந்தப்பட்ட படைப்புகளில் மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் முதலிடத்தையும், நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி 2ம் இடத்தையும், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி 3ம் இடத்தையும் பெற்றன. ஆசிரியர்களுக்கான படைப்புகளில் பெரம்பலூர் கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி 2ம் இடத்தையும் பெற்றன. இந்த பரிசு பெற்ற பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டன.இவைதவிர ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தின் சார்பில் 8 தலைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட 24 பள்ளிகளுக்கு முதல் பரிசாக 8 பள்ளிகளுக்கு தலா ரூ.1,000, 2ம் பரிசாக 8 பள்ளிகளுக்கு தலா ரூ.750, 3ம் பரிசாக 8 பள்ளிகளுக்கு தலா ரூ.500 என மொத்தம் ரூ.18 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கன் சான்றிதழ், ரொக்கப்பரிசை வழங்கினார்.