உளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர் மனைவியுடன் கார் விபத்தில் சிக்கி பலி

உளுந்தூர்பேட்டை,   அக். 16: உளுந்தூர்பேட்டை அருகே வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர்  மனைவியுடன் கார் விபத்தில் சிக்கி பலியானார். அவருடைய மகள் உள்பட 5 பேர்  படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரத்தை  சேர்ந்தவர்  நூர்முகம்மது மகன் அசன்முகம்மது(45). சவுதி அரேபியாவில்  வேலை செய்து  வந்துள்ளார். விடுமுறைக்காக வெளிநாட்டில் இருந்து விமானம்  மூலம் சென்னை  வந்தவரை மனைவி சபீதாகனி (38) உள்ளிட்ட உறவினர்கள் ஒரு காரில்  சென்னை விமான  நிலையம் சென்று அங்கிருந்து நேற்று அதிகாலை அழைத்துக்கொண்டு   திரும்ப வந்து கொண்டு இருந்தனர். இந்த காரை சிவக்குமார் (36) என்பவர் ஓட்டி   வந்துள்ளார். காலை 7 மணிக்கு உளுந்தூர்பேட்டையை அடுத்த ஒலையனூர் என்ற   இடத்தில் கார் சென்று கொண்டு இருந்த போது திடீரென காரின் முன்பக்க டயர்   வெடித்ததில் கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில்   மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து நொறுங்கியதில்   அசன்முகம்மது மற்றும் அவருடைய மனைவி சபீதாகனி (38), மகள் சபீராபானு(13)   மற்றும் உறவினர்கள் ஜலால்(24), பாத்திமா(29), சாகிராபானு(29), டிரைவர் சிவக்குமார் உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ  இடத்திற்கு சென்ற  உளுந்தூர்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு  உளுந்தூர்பேட்டை  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.  இதில் சிகிச்சை  பலனின்றி அசன்முகம்மது உயிரிழந்தார். பலத்த காயமடைந்த  சபீதாகனி, டிரைவர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  அங்கு சபீதாகனி இறந்தார், இதற்கிடையே டிரைவர் சிவக்குமார் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு  பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories: