திண்டிவனம், அக். 16:திண்டிவனத்தில் முறிந்துவிழும் அபாய நிலையில் உள்ள இரும்பு மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டிவனம் பாரதி வீதியில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. முக்கிய சாலையான இந்த வழியில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக திருப்பதி, காஞ்சிபுரம், வந்தவாசி, பெங்களூர், திருவண்ணாமலை, செஞ்சி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் திண்டிவனத்தை கடந்து செல்கின்றன. ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் தினமும் இவ்வழியாக செல்கின்றனர். இந்த சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் பழுதடைந்து முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.