புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து சாமிபிள்ளைதோட்டம் பகுதியில் முதல்வர் நாராயணசாமி நேற்று வீடு, வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அவருடன் வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, கீதாஆனந்தன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், காங்கிரஸ் பிரமுகர் காசிலிங்கம், இந்திய கம்யூ., முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர்.பிரசாரத்திற்கு இடையே முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவரை பொறுத்தவரை காமராஜர் நகர் தொகுதியை திரும்பி பார்க்காதவர். அவர் முதல்வராக இருந்தபோது தொகுதி பக்கமே வராதவர். காமராஜர் நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் கொண்டு வருவோம் என ரங்கசாமி கூறி வருகிறார். இதையே தான் நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றிலும் கூறினார். மக்கள் அவரை நிராகரித்தார்கள், மரண அடி கொடுத்தார்கள். புதுவையில் நியமன உறுப்பினர்களை சேர்த்து மொத்தம் 33 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுக மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேட்சையுடன் சேர்த்து நாங்கள் மொத்தம் 18 பேர் இருக்கிறோம். ஆனால்
7 பேரை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி மாற்றம் கொண்டு வர முடியும்.