மதுராந்தகம், அக். 16: மதுராந்தகம் அடுத்த செண்டு பொறியியல் கல்லூரி சார்பில், அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, ‘டாக்டர் கலாம் கனவு மாணவர்கள்’ எனும் அமைப்பு தொடக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூரில் செண்டு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் நேற்று, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘டாக்டர் கலாம் கனவு மாணவர்கள்’ எனும் அமைப்பு தொடக்க விழா நடந்தது.கல்லூரி நிறுவனர் டாக்டர் கே.மீர்முஸ்தபா உசேன் தலைமை தாங்கினார். இயக்குனர் எம்.இர்ஷாத்சேட் முன்னிலை வகித்தார். முதல்வர் அ.முகம்மது அப்துல்காதர் வரவேற்றார். முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் தொடக்க விழாவில், சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் குரு ராஜேந்திரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முன்னிட்டு புதிய அறிவியல் கண்டு பிடிப்புகள், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி நிர்வாக அலுவலர் இரா.மணிவண்ணன் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.