பள்ளிப்பட்டு, அக். 16: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி உலக கைகள் கழுவும் தினவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று உலக கைகள் கழுவும் தினவிழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பி.ஜெ.நாகலட்சுமி தலைமை வகித்தார். ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.கலைச்செல்வி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு கைகள் கழுவும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
அவர் பேசுகையில், ‘’ஒவ்வொருவரும் கைகளை 30 நொடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனென்றால் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் படர்ந்திருக்கும். கைகள் கழுவாமல் சாப்பிடுவதினால் வாந்தி, வயிற்றுப்புண், மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் உண்டாகும். எனவே மாணவ, மாணவிகள் சாப்பிடுவதற்கு முன் கைகள் கழுவும் அவசியத்தை தானும் செய்து வீட்டில் உள்ளவர்களையும் செய்ய வைக்க வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மு.கிருஷ்ணன், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் பால் ஏசுடையான், ஆசிரியர்கள் சுமதி,வடிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.