வியாசர்பாடி பகுதியில் கொலை திட்டம் தீட்டிய 2 ரவுடிகள் பிடிபட்டனர்: ஆயுதங்கள் பறிமுதல்

பெரம்பூர்: வியாசர்பாடி சஞ்சய் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி காவல் நிலைய எஸ்ஐ பிரேம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். போலீசார், அவர்களை விரட்டிச் சென்று வியாசர்பாடி சஞ்சய் நகர் பூங்கா அருகே 2 பேரை மடக்கி பிடித்தார். மற்ற 2 பேர் தப்பினர்.  பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அஜித்குமார் (25) மற்றும் தண்டையார்பேட்டை சஞ்சய் நகரை சேர்ந்த தண்டபாணி (25) என்பது தெரியவந்தது. அஜித்குமாரின் தம்பி மகேஷ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு திருப்புவனத்தில் வைத்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் அவர் பலத்த காயத்துடன் உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ராஜா என்பவர், தற்போது கொளத்தூரில் தங்கி வேலை செய்து வருவதாகவும், அவரை தீர்த்துக் கட்டுவதற்காக அஜித்குமார், வியாசர்பாடியில் வந்து தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, அஜித்குமார் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து, ராஜாவை கொலை செய்ய சென்றபோது, போலீசிடம் பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அஜித்குமார் மற்றும்  தண்டபாணியை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரண்டு பெரிய கத்தி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: