202வது நினைவுதினம் கட்டபொம்மன் சிலைக்கு இன்று மரியாதை

கயத்தாறு, அக். 16: சுதந்திர போராட்ட வீரர் மாமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 220வது நினைவுதினம் இன்று (16ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து இங்குள்ள சிவசூரிய நாராயணன் கல்யாண மஹாலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்று அன்னதானத்தைத் துவக்கிவைக்கிறார். கயத்தாறில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அனைத்து நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் மாரியப்பன் நாயுடு தலைமை வகிக்கிறார்.

மாநில பொதுச்செயலாளர் சடகோபராமானுஜம் நாயுடு, மாநில ஒருங்கிணைப்பாளர் மனோகரன் முன்னிலை வகிக்கின்றனர். மாநில செயல்தலைவர் ஜெயக்குமார், இணை பொதுச்செயலாளர் திலீப்குமார், தென்மண்டல தலைவர் மகேஷ் கண்ணன், இளைஞர் அணி நிர்வாகி கண்ணன் வரவேற்கின்றனர். இதையடுத்து மாநில தலைவர் ராமதாஸ் நாயுடு, அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் இணைந்து அன்னதானம் வழங்குகிறார். மாநில பொருளாளர் தர்மராஜ் நாயுடு நன்றி கூறுகிறார். நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தேசபக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாகப் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ள கட்டபொம்மனின் நேரடி வாரிசுதாரரான வீமராஜா, தலைநகர் சென்னையில் கட்டபொம்மனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: