சம்பள பாக்கி வழங்காததால் சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 15: சம்பள பாக்கி வழங்காததால் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகம் முன் தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள துகிலி கோட்டூரில் அம்பிகா சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சம்பள பாக்கி வழங்கப்படாததால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஊழியர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆலை நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை திருவிடைமருதூர் தாலுகா அலுவலகம் எதிரில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவிடை மருதூர் தாசில்தார் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த வார இறுதிக்குள் ஆலை நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவை ஊதியம் வழங்காதபட்சத்தில் முதல்கட்டமாக இருப்பு வைக்கும் அறைகள் சீல் வைக்கப்படும் என்று தாசில்தார் சிவக்குமார் கூறினார். இதையடுத்து ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: