×

நாமக்கல் அருகே நள்ளிரவில் பயங்கரம் கணவன், மனைவி வெட்டி படுகொலை

நாமக்கல், அக்.15: நாமக்கல் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கணவன், மனைவியை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல், தடுக்க முயன்ற தந்தையையும் வெட்டி விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்-சேந்தமங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ்(26). இவர் நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் பழக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அனிதா (23). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு விமல்ராஜ், அனிதா மற்றும் அனிதாவின் தந்தை கருப்புசாமி(50) ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். இரவு 9.30 மணியளவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், அனிதா , விமல்ராஜ் ஆகிய இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க வந்த கருப்பசாமியையும், அந்த கும்பல் வெட்டியது. பின்னர், அங்கிருந்து தப்பியோடி விட்டது. இந்த கொடூர தாக்குதலில், விமல்ராஜ்,அனிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

 இதுகுறித்த தகவலறிந்த நாமக்கல் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் எஸ்ஐ பூபதி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கருப்பசாமியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட விமல்ராஜ், அனிதாவின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து இருவரின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். அப்போது, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏ ற்பட்டது.  இதையடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த கொடூரக் கொலை குறித்து முதல் கட்டமாக அனிதா மற்றும் விமல்ராஜின் உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வீடு புகுந்து கணவன், மனைவி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Namakkal ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...