பள்ளிபாளையம், அக்.15: பள்ளிபாளையம் அடுத்த விளாங்காட்டூரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி லட்சுமி. தறிப்பட்டறை தொழிலாளியான இவர், நேற்று விடுப்பு எடுத்துக்கொண்டு, காடச்சநல்லூர் ஊராட்சி அண்ணா நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அங்குள்ள விற்பனையாளர் திருப்பதி, லட்சுமியிடம் வாக்காளர் அடையாள அட்டையின் நகலை கேட்டுள்ளார். திடீரென எதற்காக கேட்கிறீர்கள் என லட்சுமி கேட்டதற்கு, அதிகாரிகள் கட்டாயம் வாங்கச்சொல்லி உள்ளனர் என விற்பனையாளர் தெரிவித்துள்ளார். மறுமுறை வரும்போது கட்டாயம் எடுத்து வருகிறேன் என கூறியதை ஏற்க மறுத்த விற்பனையாளர், லட்சுமிக்கு ரேஷன் பொருட்களை வழங்க மறுத்து துரத்தியடித்தார். இதேபோல், வாக்காளர் அடையாள அட்டை நகல் கொண்டு வராத பலருக்கும், ரேஷன் பொருட்கள் வழங்கப்படாதது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. லட்சுமியின் கணவர் கோவிந்தராஜ் இதுகுறித்து கலெக்டரிடம் புகார் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.