×

பெரியகோட்டப்பள்ளி அரசு பள்ளியை சீரமைக்க₹1.10 லட்சம் நிதியுதவி

கிருஷ்ணகிரி, அக்.15:  கிருஷ்ணகிரி அடுத்த பெரியகோட்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியை சீரமைக்க ₹1 லட்சத்து 10 ஆயிரத்தை கிராம மக்கள் வழங்கினர்.கிருஷ்ணகிரி அருகே பெரியகோட்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் மேம்பாடு, பள்ளி சீரமைப்பு மற்றும் புரவலர் இணைப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு தலைமையாசிரியர் மோட்சரணி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் மகேந்திரன் வரவேற்றார். விழாவில் பள்ளியை சீரமைக்க கிராம மக்கள் ஒன்றிணைந்து ₹1 லட்சத்து 10 ஆயிரமும், புரவலர் நிதியாக 54 பேர் தலா ₹1000 வீதம் ₹54 ஆயிரமும் வழங்கினர். இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், தொடர்ந்து 7 ஆண்டுகளாக 10 வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு, கிராம மக்கள் விருதுகளை வழங்கி பாராட்டினர். இதையடுத்து மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. வரலாற்று ஆசிரியர் பாலசந்திரன் நன்றி கூறினார். விழாவில், முன்னாள் மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Periyakottapally Government School ,
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்