கடத்தூர், அக்.15: கடத்தூர் அருகே வெ.புதூர் பகுதியில் சமூக தணிக்கை மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, தணிக்கை வட்டார அலுவலர் பிரதாப் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி செயளாலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில், கிராம ஊராட்சியில் தணிக்கை குழு நடைபெற்ற விவரம், மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கு பெறும் பயனாளிகளுக்கு, 100 நாளிலிருந்து 150 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும். தினகூலி தொகை ₹300 உயர்த்தி தரவேண்டும். இங்குள்ள விவசாயிகளுக்கு கால்நடை கொட்டகை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் எழுப்பினர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.