மஞ்சள் சாகுபடி பரப்பு குறைகிறது

கோவை, அக். 15:  கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள், பொது சங்கங்கள், மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அந்த மனுக்களின் விபரம் வருமாறு:மஞ்சள் விவசாய சாகுபடியை ஊக்குவிக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : கோவை மாவட்டத்தில் மஞ்சள் விவசாயம் மேட்டுப்பாளையம், அன்னூர், சத்தியமங்கலம், தொண்டாமுத்துார், சிறுமுகை, சுல்தான்பேட்டை, சூலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மேற்படி மஞ்சள் சாகுபடி ஆள்பற்றாக்குறை உற்பத்தி செலவு, தட்பவெப்ப சூழ்நிலை உற்பத்தி மகசூல் பாதிப்பு மற்றும் விலைப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நாளுக்கு நாள் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. மஞ்சள் உற்பத்திற்கு விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல், நஷ்டம் ஏற்பட்டு வருவதால், மஞ்சள் சாகுபடி என்பது முற்றிலும் கைவிடுகின்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டார்கள். விவசாயிகளுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்திடவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு விதை மஞ்சள்களை 100 சதவீதம் மானிய விலையில் வழங்கிடவும் மற்றும் உற்பத்தி செலவினங்களை முழுவதையும் அரசே ஏற்றிடவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு ேகாரி கோவை மாவட்ட தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாநகரில் சமீப காலமாக ஆட்டோ ஓட்டுனர்களை தாக்குதலுக்கு உட்படுத்தி கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் கோவை சரவணம்பட்டியில் பட்டப்பகலில் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த சமூக விரோதிகள் தனது கருவியான கரண்டி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோ ஓட்டுனரை தாக்கி குத்தி கொலை செய்தனர். அதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே கோவை மாநகர ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல வாரியம் மூலம் ஆட்டோ ஓட்டுனர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும், ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.தமிழில் பெயர் பலகை வைக்க கோரி நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் முகமது ரபீக் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் தங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதனை நடைமுறைப்படுத்தவில்லை. கோவை மாவட்டத்தில் உடனடியாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: