×

அதிவேக பயணம் தனியார் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

கோவை, அக்.15:கோவை நஞ்சுண்டாபுரம்  பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை கீரணத்தம் பகுதியில் இருந்து ஐ.டி ஊழியர்களை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி செல்லும் பணியில் தனியார் பஸ் சர்வீஸ் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து ஈடுபட்டுள்ளது. நேற்று வழக்கம்போல ஊழியர்களை அழைத்துக்கொண்டு ராமநாதபுரம் வழியாக நஞ்சுண்டாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை வேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டியதாக தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அன்சர்ராஜா கூறுகையில், ‘‘இந்த பேருந்து தினமும் வேகமாக செல்கிறது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இந்த பேருந்து மிக வேகமாக சென்றது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர்’’ என்றார்.பொதுமக்கள் திடீரென பேருந்தை சிறைபிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.




Tags : civilians ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை