×

தாயை இழந்த குட்டி யானை மீண்டும் காட்டில் சேர்க்கும் முயற்சி வெற்றி பெறும்

சத்தியமங்கலம், அக்.15: தாயை இழந்த குட்டி யானையை மீண்டும் காட்டில் சேர்க்கும் முயற்சி வெற்றி பெறும் என ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் தெரிவித்தார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதி பவளக்குட்டையில் வனத்தில் வழி தவறி வந்த 3 மாத பெண் குட்டி யானை, விவசாயத் தோட்டத்தில் சுற்றித் திரிந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவித்தனர். இந்த நிலையில் குட்டியை, தாய் தேடி வந்த நிலையில் ஆசனூர் வனச்சாலையில் குட்டி யானை புகுந்தது. தகவலறிந்து  வந்த வனத்துறையினர், குட்டியை மீட்டு பவானிசாகர் காராட்சிக்கொரை வனக் கால்நடை மருத்துவமனையில் சேர்த்து பராமரித்து வந்தனர். குட்டி யானைக்கு தினமும் 15 லிட்டர் லேக்டோசின் கொடுத்து பாதுகாத்தனர்.

இந்நிலையில், தாயை பிரிந்த குட்டியை மீண்டும் தாயிடம் சேர்ப்பதற்கு வனத்துறையினர் கடந்த 9ம் தேதி நடவடிக்கை எடுத்தனர். தனி வாகனம் மூலம் குட்டியை அழைத்து கொண்டு பண்ணாரி பேலாரி கோவில் காட்டுப்பகுதியில் காத்திருந்தனர்.
கடந்த 6 நாட்களாக அப்பகுதியில் தாய் யானை வராததால், மற்றொரு யானை கூட்டத்தில் சேர்ப்பதற்கான முயற்சியும் நடந்து வருவதாக தெரிவித்தனர். குட்டி யானையின் நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கேள்வி எழுப்பினர். குட்டியை யானைக்கூட்டத்தில் சேர்ப்பதற்கு வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை ரகசியமாக இருப்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்ப இணை இயக்குநர் அலுவலகத்தில் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் தலைமையில் நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் குட்டி யானை நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதனிடம் கேட்டபோது, குட்டி யானையை மீண்டும் யானை கூட்டத்தில் சேர்ப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இதில், வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Tags : jungle ,
× RELATED 4 நக்சல்கள் பலி