துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 200வது வார்டுக்குட்பட்ட செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவஹர் நகர் ஆகிய பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த 56 குடும்பங்களுக்கு மட்டும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு பட்டா வழங்க கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், தாம்பரம் கோட்டாட்சியர், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை இப்பகுதி மக்கள் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, நீர்நிலை இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன், வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதிக்கு சென்று பட்டா வழங்குவது குறித்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.