ஊத்துக்கோட்டை, அக். 15: கூனிப்பாளையம் கிராமத்தில் மும்முனை சந்திப்பில், செடி, கொடிகள் படர்ந்து பயனற்ற நிலையில் புதர் மண்டி கிடக்கும் பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே கூனிப்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள காலனி பகுதியை அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள், கூனிப்பாளையம் வந்து அங்கிருந்து திருவள்ளூர், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2006 - 2007ம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.
ஆனால், தற்போது இந்த பயணிகள் நிழற்குடை அருகே செடி, கொடிகள் படர்ந்து பயனற்ற நிலையில் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.