சிதம்பரம், அக். 15: சிதம்பரம் நகரில் பைக்கில் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வந்த கணவரை நகர போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் இச்செயலை வாட்ஸ்அப், முகநூலில் பார்த்த பொதுமக்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிதம்பரம் கஞ்சிதொட்டி அருகாமையில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி பகுதியில் இருந்து மனைவி, குழந்தைகளுடன் பைக்கில் வந்த நபரை போலீசார் நிறுத்தி விசாரித்துள்ளனர். அதற்கு பைக்கில் வந்தவர் நான் தான், ஹெல்மெட் அணிந்துள்ளேனே, எதற்கு என்னை பிடித்து விசாரிக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பைக்கில் 2 பேர் மட்டும் தான் வரவேண்டும், எதற்கு குழந்தைகளை அழைத்து வந்தீர்கள் எனக் கேட்டு போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பைக்கில் வந்த பெண்மணியும், பலமுறை சாரி, சாரி (மன்னிப்பு) என கேட்டும் போலீசார் அபராதம் விதித்த சம்பவம் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கட்செவி (வாட்ஸ்அப்), முகநூலில் (பேஸ்புக்) வைரலாகி வருகிறது. போலீசாரின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.