புதுவை பல்கலை. மாணவர்களின் கிராமிய முகாம் தொடக்கம்

காரைக்கால், அக். 14:  காரைக்கால் திருநள்ளாறு நல்லெழுந்தூர் கிராமத்தில், புதுவை பல்கலைக்கழக சமூக பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் ஒரு வார கால கிராமிய முகாம் துவக்க விழா நடந்தது. பல்கலைக்கழக காரைக்கால் மைய சமூக பணித்துறை தலைவர் பேராசிரியர் நளினி தலைமை தாங்கினார். மாணவி காவியா வரவேற்றார். காரைக்கால் மைய தலைவர் செந்தில்குமார், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  இந்த முகாமை மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தொடங்கி வைத்து  பேசியதாவது: ஒரு கிராமத்தை தேர்வு செய்து, இதுபோன்ற முகாமை நடத்த மாணவர்கள் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. இதுபோன்ற முகாம்களை நடத்தும் மாணவர்கள், தாம் பயிலும் கல்வி சார் விவரத்தை வைத்தோ, பொருளாதாரத்தை வைத்தோ சமூக பிரச்னைகளை தீர்த்துவிட முடியாது என்பதை உணர்ந்து, மக்களின் பிரச்னைகளுக்கான தீர்வை தெரிவிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் மக்கள் பாதிக்கக்கூடிய வகையில் ஒரு பிரச்னை எழும்போது, தனி ஆளாக இல்லாமல், குழுவாக சேர்ந்து தீர்த்து வைக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நாம் எண்ணியது நடக்கும். கிராம மக்களுக்கு குழுவின் பெருமை புரியும். அவர்களும் குழுவாக இணைந்து மற்ற காரியங்களை செய்வார்கள் என்றார். தொடர்ந்து, ஞானதயாளன் கிராமிய முகாம் குறித்து விளக்கமளித்தார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஹிலாரியா பிரீத்தி நன்றி கூறினார்.

Related Stories: